சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்.தமிழகத்தில் அரபி மொழியியல் துறையின் பிதாமகனாக விளங்கியவர்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னை பல்கலைக்கழகத்தின் அரபி, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் பி. நிசார் அஹ்மது அவர்கள் சற்று முன் வாணியம்பாடியில் மரணமடைந்தார்கள் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மாணவர் பருவத்திலிருந்து நட்பு கொண்டிருந்த ஒரு அறிவார்ந்த நண்பரை இழந்து விட்டேன்.
சென்னை பல்கலைக்கழகத்தின் அரபி, உருது மற்றும் பார்சி ஆகிய ஒருங்கிணைந்த மூன்று மொழிக்கான துறையின் தலைவராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் பேராசிரியர் நிசார் அஹ்மது. திருக்குர்ஆன் விளக்கவுரை உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ள அவர் பல நூறு முனைவர்களை உருவாக்கியிருக்கிறார்.
மத்ரசா கல்வியில் பயின்ற ஆலிம்கள் பலர் இன்று முனைவர் பட்டம் பெற்றுச் சிறப்புறச் சேவையாற்றுகிறார்கள் என்றால் அதற்கு வழிவகுத்தவர் பேராசிரியர் நிசார் அஹ்மது அவர்கள். இதே போல் மத்ராசாவில் பயிலும் ஆலிம்கள் அஃப்லலுல் உலமா என்னும் சான்றிதழ் பெறுவதற்கு வழிவகுத்தவர் பேராசிரியர் நிசார் அஹ்மது அவர்கள்.
உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அரபி மொழி சிறப்பான இடம் பெற இவர் எடுத்த முயற்சிகள் பெரிதும் மெச்சத்தக்கவை.
என் மீது மிகுந்த பிரியமும் பாசமும் உடையவர். இவரது மாணவரும் தற்போதைய சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு மொழி பேராசிரியருமான மவ்லவி முனைவர் அ. ஜாஹிர் ஹீசைன் பாகவி அவர்கள் இந்த வாரம் மக்கள் உரிமையில் கீழடியும் சிரியா நாணயமும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவரை மேற்கோள் காட்டி ஒரு வரலாற்றுச் நிகழ்வை மேற்கோள்காட்டுகிறார்.
அவரது மகனார் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் அரபித் துறை தலைவர் தம்பி தன்வீர் அஹ்மதுவுடன் சற்று முன் இறப்புச் செய்தி அறிந்து தொலைப்பேசியில் பேசினேன். அவரால் என்னுடன் பேசவே இயலவில்லை. நீண்ட நேரம் நான் ஆறுதல் சொன்ன பிறகு தன்வீர் சொன்ன வார்த்தை என்னையும் ஆறாத் துயரில் ஆழ்த்தியது. ‘சார் இன்று மாலை 5 மணிக்கு என் தந்தை என்னை அழைத்து ஜவாஹிருல்லா எப்படி இருக்கிறார். அவருடன் பேச வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். அவர் நல்லா இருக்கிறார் என்று சொன்ன நான் உங்களுடன் அவரை பேச வைக்கமுடியாமல் போய்விட்டதே’ என்று தேம்பிச் தேம்பி சொன்னார்.
கல்வி அளிப்பது நிரந்த நல்லறம். இன்று அவரது மாணவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கல்விப் பணியில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றார்கள். வாழையடி வாழையாக இந்த நல்லறம் நிசார் அஹ்மதுஅவர்களுக்கு இறப்பிற்குப் பிறகு நன்மையைக் கொண்டும் சேர்க்கும் நல்லறங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கும்.
வல்ல இறைவா அவரது பிழைகளைப் பொறுத்து அவருக்கு உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மாணவர்களுக்கும் அழகிய பொறுமையை வழங்குவாயாக.
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி