ஈரானிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்க்களிலும் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக 734 மீனவர்கள் ஈரான் நாட்டு கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
கொரோனா தொற்றால் அந்நாட்டில் பிறப்பபிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் சிக்கி பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 3 மாதங்களாக அவர்களுக்கு சரியான உணவும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதே போல் கோவா மாநிலத்தில் உள்ள மாலிம் துறைமுகத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 மீனவர்களும், கர்நாடகா மாநிலம் மால்பே, கேரளா மாநிலம் கண்ணூர் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த 118 மீனவர்களும், அந்தமான் யூனியன் பிரேதசத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 190 தமிழக மீனவர்களும் கரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
எனவே ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களையும் இந்தியாவில் பல்வேறு மாநில நகரங்களிலும் உள்ள மீனவர்களையும் உடனடியாக மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001
20—05-20